tirsdag 24. februar 2015

கணக்கில் எடுக்கப்படாத கடதாசிப் பூ

வெய்யிலை
நிரந்தரமாகவே
நட்பாக
வைத்துக்கொண்டு
தண்ணியில்லாக்
காட்டிலும்
சுண்ணாம்பு  மண்ணோடு
ஒப்பந்த அடிப்படையில்
வேர் விட்டு....

குடாநாட்டுக்கு
எல்லா நிறங்களிலும்
கலந்து தெளித்து
நீளமாக
விலாசம் தந்தும்
அருச்சனைத் தட்டை
அலங்கரிக்கும்
உரிமைகள்
மறுக்கப்பட்டு....

தூக்கம் வராத
காற்றோட்டமான
இரவில்
தூங்கப் போகாத
விண் மீன்களுக்குக்
காதல்க் கடிதமெழுதி
தேன் வழியும்
மலர்களோடு
போட்டி போட்டுத்
தோற்றுப்போய்க்...

காதலிக்கத்
தேவையான
தகுதியில்
வருடம் முழுவதும்
வாசம் இல்லாததால்
வண்டுகள்
நிராகரித்த...

மார்கழிப்
பனி நீருக்குள்ளும்
கண்ணீரில்
முகம் கழுவி
அழுது களைத்துப்
பொலிவிழந்து
போன வரை
கணக்கில்
எடுக்கப்படாத
கடதாசிப் பூ
போகன்வில்லா.

நாவுக் அரசன்
ஒஸ்லோ18.02.15

Ingen kommentarer:

Legg inn en kommentar